வினாத்தாள் கசிந்ததால் ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து

வினாத்தாள் கசிந்ததால் ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து!
  லக்னோ,உத்தர பிரதேசத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (UPTET) இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்தது. முதல் ஷிப்ட் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை 2,554 மையங்களிலும், 2-ஆம் ஷிப்ட் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை 1,754 மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

   இந்த நிலையில் காலை 10 மணிக்கு தேர்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு, வாட்ஸ்-ஆப்பில் வினாத்தாள் கசிந்ததுள்ளது. இதன் காரணமாக உத்தர பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிந்த செய்தி வெளியானதை அடுத்து, மாநிலம் முழுவதும் எஸ்.டி.எஃப்.( STF) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் லக்னோவில் 4 பேர், ஷாம்லியில் 3 பேர், அயோத்தியில் 2 பேர், கௌசாம்பியில் ஒருவர் மற்றும் பிரயாக்ராஜில் 13 பேரை எஸ்.டி.எஃப். போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாநிலம் முழுவதும் மொத்தம் 13,52,086 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத இருந்த நிலையில், இன்று தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

   இருப்பினும் அடுத்த ஒரு மாதத்திற்குள் மீண்டும் தேர்வை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் மற்றும் ஒழுங்கு ஏ.டி.ஜி. பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். அதே சமயம் மறுதேர்வு எழுதுவதற்கு விண்ணப்பதாரர்கள் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments