கோடை
வெயிலில் திறந்தவெளியில் செல்லக் கூடாது: மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை
அறிவுறுத்தல்
கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமென
மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
அனைத்து விதமான பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும்
மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து
கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும். அதற்கான சில
அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதிக வெயில் உள்ள நேரங்களில் குறிப்பாக மதியம் 12 முதல் 3 மணி வரை
திறந்தவெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் தேவையான அளவு
பருகுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். ஒவ்வொரு பாடவேளை
தொடக்கத்தின்போதும் மாணவர்கள் நீர் அருந்த வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
ஓஆர்எஸ் மற்றும் வீட்டில் தயார் செய்த எலுமிச்சை சாறு, நீர்மோர், லஸ்ஸி,
பழச்சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து பருகலாம். பள்ளியில் தேவையான ஓஆர்எஸ்
பாக்கெட்கள் மற்றும் முதலுதவி பெட்டகத்தினை தயார் நிலையில்
வைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments