ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை: முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
மதுரையில் இன்று உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று
வருகிறது. சீறி வரும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி வருகின்றனர். சில
காளைகள், மாடுபிடி வீரர்களை தூக்கி எரிந்துவிட்டு தப்பிச்செல்கின்றன. இவ்வாறு
போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
அலங்காநல்லூர் வந்தடைந்தார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்
உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் விழா மேடையில் அமர்ந்தவாறு முதல்-அமைச்சர்,
போட்டியை கண்டுகளித்தார். வாடிவாசலில் சீறிப்பாயும் காளைகளையும், காளையர்களின்
வீரத்தையும் நேரில் பார்வையிட்டு மகிழ்ந்தார். அப்போது ஜல்லிக்கட்டில் வெற்றி
பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கு தங்க நாணயம் மற்றும் மோதிரங்களை பரிசாக
முதல்-அமைச்சர் வழங்கினார்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக 2 முக்கிய அறிவிப்புகளை
வெளியிட்டுள்ளார். இதன்படி அதிக காளைகளை தழுவிய சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு,
கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும்
என்றும் அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் உயர்தர ஜல்லிக்கட்டு பயிற்சி, சிகிச்சை
மையம் அமைக்கப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
0 Comments