அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு விரைவில் கிடைக்கும் - அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை

        மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு  விரைவில் கிடைக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகே வெள்ளாளப் பாளையத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் புதிதாகக் கட்டப்பட்டது. அக்கட்டிடங்களின் திறப்பு விழா இன்று அமைச்சர் செங்கோட்டையன்  தலைமையில் நடைபெற்றது. இதில் விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

       அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ''நாம் விரைவிலேயே மகிழ்ச்சி அடையும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு  கிடைக்கும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 303 சீட்டுகள் கிடைக்கும் வரலாற்றை நீங்கள் காணப் போகிறீர்கள். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று சட்டம் இயற்றியதே நாங்கள்தான். மாணவர்களுக்காக இன்று பேசும் யாரும் அதைச் செய்யவில்லை. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலாவது இது செய்யப்பட்டிருக்கிறதா?

       தமிழ்நாட்டில்தான் முதன்முதலாக இது தொடங்கி இருக்கிறது. இது ஒரு வரலாறு'' என்றார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீட்டுச் சட்ட மசோதா, அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments