தமிழ்நாட்டில் பாடத் திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன - அமைச்சர் செங்கோட்டையன்

     தமிழ்நாட்டில் பாடத் திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கரூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, 'குழு அறிக்கையின் அடிப்படையில் தமிழக பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும். கல்வித் தொலைக்காட்சியில் சனிக்கிழமைகளில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும். நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90% கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் தமிழக பாடத் திட்டத்தில் இருந்து 196 கேள்விகள் கேட்கப்பட்டன. தமிழக அரசின் பாடத் திட்டத்தின் தரத்தை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

      காலாண்டு தேர்வு குறித்து தற்போது முடிவு செய்ய முடியாது.கொரோனா நோய் தொற்று குறைந்த பின்னரே தேர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும். எத்தனை போட்டித் தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம்.கொரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.' என்றார். இதனிடையே 10,11,12ம் வகுப்பு துணை தேர்வின் போது தண்ணீர் பாட்டில், சானிடைசர் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கையுறை அணிந்து தேர்வு எழுதவும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது. செப்டம்பர் 21ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை துணைத்தேர்வு, தொடக்க கல்வி பட்டய தேர்வு நடைபெறுகிறது.


Post a Comment

0 Comments