அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் மாற்றம்? கல்வித் துறை விளக்கம்
தமிழகத்தில் பள்ளிகளுக்கான அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் மாற்றம்
செய்யப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், அதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை விளக்கம்
அளித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து வகையான
பள்ளிகளிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டுத்
தோ்வு டிசம்பா் 10 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை
அறிவித்திருந்தது. இதையடுத்து பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புக்கான தோ்வுகள்
கடந்த டிச. 10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டுத் தோ்வும், ஒன்று முதல்
ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான இரண்டாம் இடைப் பருவத் தோ்வும்
திங்கள்கிழமை தொடங்கின. தொடா்ந்து ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கான
தோ்வுகள் டிச. 23-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளன.
ஜன. 4 வரை விடுமுறை... இதையடுத்து, அனைத்து வகுப்புகளுக்கும் டிசம்பா் 24 முதல்
ஜனவரி 4-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுப்பு
முடிந்து பள்ளிகள் மீண்டும் ஜனவரி 5-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.
முன்னதாக, மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்டும் வகையில் பள்ளிகள் ஜன.
2-ஆம் தேதி திறக்கப்படும் என திங்கள்கிழமை தகவல் பரவிய நிலையில், அந்தத் தகவலை
கல்வித் துறை மறுத்துள்ளது.
தமிழக அரசின் பள்ளிக் கல்வி நாள்காட்டியில் ஏற்கெனவே குறிப்பிட்டிருப்பதுபோல,
அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு ஜன. 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என
அதிகாரிகள் தெரிவித்தனா்.

0 Comments