பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் மீண்டும் பழைய 4 பாடத்தொகுப்பு முறை - பள்ளிக்கல்வித்துறை அரசாணை

    பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் மீண்டும் பழைய 4 பாடத்தொகுப்பு முறை நடப்பு கல்வி ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறி வித்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார் நேற்று வெளியிட்ட அரசாணை:


     மாநில பொதுப்பள்ளிக் கல்வி வாரிய நிர்வாக குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கடந்த 18.09.2019 அன்று ஓர்அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, தற்போது நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகளுடன் கூடிய3 பாடத்தொகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மாணவர்கள் 3 முதன்மை பாடத்தொகுப்பு அல்லது 4 பாடத்தொகுப்பை தேர்வு செய்ய வழிவகை செய்யப் பட்டது.


    இந்நிலையில், மேல்நிலைக் கல்வி பாடத் திட்டத்தில் 3 முதன்மை பாடங்களை மட்டும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும்போது அவர்களின் உயர்கல்வி வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகள் சுருங்க நேரிடும் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தற்போது இருந்து வரும் 4 முதன்மைப் பாடங்களை, தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து வந்த கோரிக்கையை பரிசீலிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

    இச்சூழலில், பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று 2020-2021-ம்கல்வி ஆண்டிலிருந்து ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகள் கொண்ட பாடத்திட்டத்தை அனைத்து பள்ளிகளும் நடை முறைப்படுத்த அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


       பள்ளிக் கல்வித் துறையின் இந்த முடிவை திமுக தலைவர் மு.க.ஸ்டா லின் வரவேற்றுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “குளறுபடியான புதிய பாடத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என நான் கோரி இருந்தேன். இப்போதாவது அதை ரத்து செய்திருப்பதை வரவேற் கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்து விட்டுப் பின்னர் திரும்பப் பெறுவது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது. லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் இத்தனை அலட்சியமா?” என்று கூறியுள்ளார்.

       இந்த அரசாணை தொடர்பாக பள்ளிக்கல்வி முன்னாள் அமைச் சர் தங்கம் தென்னரசு நேற்று தனது முகநூல் பதிவில், “மேல்நிலைக் கல்வி புதிய பாடத் தொகுப்பு நடை முறையை தமிழக அரசு ரத்து செய் திருப்பதை வரவேற்கிறேன். இது தொடர்பான முதல் குரலை எழுப்பியவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். தமிழக மாணவர்களின் நலன் மீது அவர் காட்டி வரும் அக்கறை மிகுந்த அழுத்தம் காரணமாகவே பள்ளிக்கல்வித் துறை இந்தமுடிவை எடுத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.


     இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளி யிட்ட அறிக்கையில், “10-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு மதிப் பெண்களைக் கொண்டு மதிப்பெண் கொடுப்பது சரியல்ல. எனவே, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான குழப்பங்களை தமிழக அரசு போக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments