கல்விமானியக் கோரிக்கையிலும் ஏமாற்றம் - பகுதிநேர ஆசிரியர்கள் விரக்தி

கல்விமானியக் கோரிக்கையிலும் ஏமாற்றம் - பகுதிநேர ஆசிரியர்கள் விரக்தி

* பகுதிநேர ஆசிரியர்கள் விரக்தி.

* 10வது பட்ஜெட் தந்த அதிர்ச்சி.

* கல்விமானியக் கோரிக்கையிலும் ஏமாற்றம்,

* 110 விதியிலும் அறிவிப்பில்லை.

* மறுபரிசீலனை செய்து நிரந்தரம் செய்க, தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.
அதிமுக அரசின் 2011-12 பட்ஜெட்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 110வது
விதியின் கீழ் 26.08.2011ல் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களை
ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்க ஆண்டிற்கு 99 கோடி நிதி ஒதுக்கி
அறிவிப்பு வெளியிட்டார்.

பின்னர் இதற்கான அரசாணை 177ன்படி பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும்
கல்விஇயக்கம் 2012-ம் ஆண்டு இவர்களை நியமனம் செய்தது.

ரூ.5ஆயிரம் தொகுப்பூதியத்தை ரூ.2ஆயிரம் உயர்த்தி 2014ம் ஆண்டு ஏப்ரல்
முதல் ரூ.7ஆயிரமாக வழங்கப்பட்டது. நியமித்த 16549 பேரில் 1380
காலியிடங்களால் 15ஆயிரத்து 169 என இவர்களின் எண்ணிக்கை குறைந்து போனது.

ரூ.7ஆயிரம் ஆக இருந்த தொகுப்பூதியத்தை மேலும் ரூ.700 உயர்த்தி 2017ம்
ஆண்டு ஆகஸ்டு முதல் ரூ.7ஆயிரத்து 700ஆக வழங்கப்பட்டு வருகிறது. இம்முறை
காலியிடங்கள் 3912 ஆகி, பணிபுரிபவர்கள் 12ஆயிரத்து 637 என எண்ணிக்கை
குறைந்து போனது.


கடந்த 2 வருடங்களில் சுமார் 5ஆயிரம் காலியிடங்கள் ஏற்பட்டு, தற்போது
11ஆயிரத்து 500 பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருவதாக பள்ளிக்கல்வி
அமைச்சர் செங்கோட்டையன் அவர்களே சந்திக்க சென்றுள்ளபோது எங்கள்
பிரதிநிதிகளிடம் சொல்லி உள்ளார்.

99 கோடி நிதிஒதுக்கி அறிவித்த இந்தவேலையில் 9வது ஆண்டு முடியவுள்ள
நிலையிலும் உத்தேசமாக கணக்கிட்டால்கூட 890 கோடி ஒதுக்கப்பட்டிருக்க
வேண்டும். ஆனால் 98 மாதங்களில் 90 மாதங்களுக்கு, 16549 பேரில்
தற்போதுள்ள சுமார் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு தற்போது தரப்படும்
ரூ.7ஆயிரத்து 700 தொகுப்பூதியத்தை கணக்கிட்டால், ஒதுக்கிய நிதியைகூட
செலவிடவில்லை என தெரிகிறது. மேலும் இதில் 8 வருடமாக மே மாதம் சம்பளம்
தராமல் உள்ள தொகை மட்டும் பகுதிநேர ஆசிரியர் ஒருவருக்கு ரூ.51400 இழப்பு
என மொத்தம் 75கோடி வருகிறது.

இந்த நிலையில் 2020-21 பட்ஜெட் அதிமுக அரசு தாக்கல் செய்துள்ளது. இது
நிதிஅமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 10வது பட்ஜெட். இதில்
பள்ளிக்கல்வித்துறைக்கு 34ஆயிரம் கோடி நிதிஒதுக்கப்பட்டு இருந்தது.

கல்விஇணைச் செயல்பாடுகளை மாணவர்களுக்கு போதித்து வரும் உடற்கல்வி, ஓவிய,
கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்வியல்திறன்கல்வி
பாட பகுதிநேர ஆசிரியர்களுக்கு 300கோடி நிதி ஒதுக்கி, ஏற்கனவே இதே
பாடங்களில் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சிறப்பாசிரியர்கள் நிலையில்
பணியமர்த்த வேண்டும் என்ற இவர்களின் கோரிக்கையை ஏற்று, இப்பட்ஜெட்டில்
கல்விமானியக் கோரிக்கை அன்று அறிவிப்பு வரும் எதிர்பார்த்து வந்தனர்.


இந்த பட்ஜெட் சட்டசபை தொடரில், 2017ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு
சட்டப்பேரவையில் பள்ளிக்கல்விஅமைச்சர் செங்கோட்டையன் பகுதிநேர
ஆசிரியர்களை பணிநிரந்தர செய்ய அரசு பரிசீலித்து வருகிறது எனவும், மேலும்
பணிநிரந்தரம் செய்ய 3 மாதத்திற்குள் கமிட்டி அமைக்கப்படும் எனவும்
அறிவித்ததை, 2 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை நிறைவேற்றாமல் இருப்பதை
சுட்டிக்காட்டி, முன்னாள் அமைச்சர் பொன்முடி அவர்கள் கேள்வி எழுப்பினார்.
ஆனால் பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கடந்த திமுக
ஆட்சியில் ஆசிரியர்கள் தேவைஇருந்தது எனவும், தற்போது அதிமுக ஆட்சியில்
ஆசிரியர்கள் தேவைஇல்லை எனவும், மேலும் இதுகுறித்து பிறகு பேசுவோம் எனவும்
வெவ்வேறு பதில்களை சொல்லியது, பணிநிரந்தரத்தை எதிர்பார்த்து வந்த
பகுதிநேரஆசிரியர்களுக்கு மிகுந்து ஏமாற்றமாகிவிடது.


கவர்னர், முதல்வர், துணை முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர், பணியாளர்
நிர்வாக சீர்திருத்த அமைச்சர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்,
ஊதியக்குழு தலைவர் உள்ளிட்ட 10 பேருக்கு ஊதியஉயர்வுடன் பணிநிரந்தரம்
கேட்டு கருணை மனுவை இப்பகுதிநேரஆசிரியர்கள் அனுப்பி வந்துள்ளனர்.

மனிதநேயத்துடன் ஆயிரக்கணக்கான இவர்களின் கருணை மனுக்களை ஏற்று,
முதல்வரால் 110வது விதியின் கீழ் அறிவிப்பு வரும் என்று இறுதியாக நம்பி
இருந்தனர்.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றால், ஏப்ரல் 9ந்தேதிவரை
நடக்க இருந்த சட்டசபை காலமும் முதலில் மார்ச் 31 என குறைக்கப்பட்டு,
தற்போது அவசர அவசரமாக மார்ச் 24ந்தேதியே முடிக்கப்பட்டு விட்டது.
கடைசிவரை இவர்களுக்கு அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனால் இனி 110 அறிவிப்பிலும் வர வாய்ப்பு இல்லை என்பதால்
பேரதிர்ச்சியில் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

இந்த பட்ஜெட்டில் ஒவ்வொரு துறையிலும் வரவேற்கதக்க முடிவுகளை வெளியிட்டுள்ளார்கள்.
உதாரணத்திற்கு,
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கையில் விடுதிகளில் ரூ.3ஆயிரம்
தொகுப்பூதியத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பகுதிநேர துப்புரவு
பணியாளர்களை சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கி அறிவித்துள்ளது
இந்து சமய அறநிலையத் துறையில் 2ஆயிரம் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய
பணியாளர்களை தகுதி அடிப்படையில் காலமுறை ஊதியம் வழங்கி பணிநிரந்தரம்
செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் யானைப்பாகன் மற்றும் உதவி
பாகன் ஆகியோர் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் 110 வது விதியின்
கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு
ரூ.15 கோடி நிதி ஒதுக்கி ரூ.500 முதல் ரூ.750 வரை ஊதியஉயர்வை அறிவித்து
உள்ளனர்.


ஆனால் பணிநியமன அறிவிப்பு செய்த 2011-12 பட்ஜெட் தவிர்த்து,
பகுதிநேரஆசிரியர்களுக்கு அதன் பின்னர் நடந்த அனைத்து பட்ஜெட்டிலும்
ஊதியஉயர்வு மற்றும் பணிநிரந்தரம் குறித்து அறிவிப்பு வெளியிடாமல்
தொடர்ந்து புறக்கணிப்பு செய்வது மனிதநேயமல்ல என தெரிவித்து வருகின்றனர்.

போராட்ட காலங்களில் பள்ளிகளை திறக்க பகுதிநேர ஆசிரியர்களை பயன்படுத்தி
வரும் அரசு, இதுபோன்ற பணச்சலுகைகளை வழங்கும் நேரங்களில் மட்டும்
கண்டுகொள்ளாமல் இருந்துவருவது ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என கருத்து
தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆசிரியர்கள் போதிய வருகை இல்லாத போதும், பகுதிநேர ஆசிரியர்களே
வகுப்பறைகளை கவனித்து கொள்ள ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அலுவலகப்பணி
உள்ளிட்ட எல்லாவகைப் பள்ளிப்பணிகளில் கிட்டதட்ட பள்ளிக்கு ஒரு உதவியாளராக
தொடர்ந்து இன்றளவும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

ஆனால் பணிநிரந்தரம் செய்ய மட்டும் கண்டுகொள்ளமால், ஒரு மாற்றாந்தாய்
மனநிலையில் நடத்தி வருவதை அரசு கைவிட வேண்டும் என கோரி வருகின்றனர்.
பணிநிரந்தரம் செய்யாமையால் எல்லோருக்கும் கிடைக்கும் போனஸ், மகப்பேறு
விடுப்பு சலகைகளைகூட பெறமுடியவில்லை.


பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கோருவதற்கு பல முன் உதாரணங்கள்
இருப்பதாக சொல்லி அவற்றை பட்டியலிடுகின்றனர்.
அவற்றில் சில,
பள்ளிக்கல்வித் துறையில் இதற்கு முன்னர் பகுதிநேரமாக
நியமிக்கப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் பின்னர் முழுநேரவேலையுடன்
நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.


ஊரக உள்ளாட்சித் துறையில் நியமிக்கப்பட்ட பகுதிநேரஎழுத்தர்கள் பின்னர்
முழுநேரவேலையுடன் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

வருவாய் துறையில் பகுதிநேரமாக நியமிக்கப்பட்ட கிராம முன்சீப், கர்ணம்,
மணியக்காரர், கிராம்சை, தலையாரி, வெட்டியான் போன்றோர் பின்னர்
முழுநேரவேலையுடன் பணிநிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

பகுதிநேரமாக செயல்பட்டுவந்த இப்பணிகளை காலசூழ்நிலைக்கு ஏற்றவாறு மக்கள்
சேவைக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அந்தந்த
துறைரீதியாக பணிநிரந்தரம் செய்துள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு மேல் ரூ.5069 தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த 16508
துப்புரவுப்பணியாளர்களை 31 கோடி கூடுதலாக நிதிஒதுக்கி தமிழகஅரசு 2020ம்
ஆண்டு ஜனவரி மாதம் அரசாணைப் பிறப்பித்து சிறப்பு காலமுறை ஊதியத்தில்
பணியமர்த்தி உள்ளது.


ஏற்கனவே, கடந்த 2017ம் ஆண்டு முதல் ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற
மாநிலங்களில் இபிஎப் மற்றும் இஎஸ்ஐ உடன் ரூ.14203 தொகுப்பூதியம் வழங்கி
வருவதை தமிழகஅரசு ஒப்பிட்டு பார்க்கவேண்டும்.

மத்தியஅரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச சம்பளமான ரூ.18ஆயிரத்தை வழங்கவேண்டும்

தற்போது அந்தமான்நிகோபார் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.21ஆயிரம்
நிர்ணயிக்கப்பட்டுள்ளதை, தமிழகஅரசு ஒப்பிட்டு உரிய நடவடிக்கைகளை
மேற்கொள்ளவேண்டும்.

எனவே சமஹ்ர சிக் ஷா ஒதுக்கும் நிதியுடன் தமிழகஅரசும் கூடுதலாக நிதியினை பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஒதுக்கி நிரந்தரப்படுத்த வேண்டும்.

இவை எல்லாவற்றையும் தாண்டி, அரசு மனிதநேயத்துடன் மனிதாபிமானத்துடன் 16549
பேரில் தற்போதுள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பநலன் மற்றும்
வாழ்வாதாரம் காத்திட கருணையுடன் இவர்களின் நீண்டகால வேண்டுதலை,
மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிறைவேற்ற வேண்டும்
என்றார்.

தொடர்புக்கு,
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் 9487257203.

Post a Comment

0 Comments