இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்: 11 ஆயிரத்தை தாண்டியது
ஆப்சென்ட்; மாவட்டத்திலும் வீட்டுக்காவல் முடிவு
தமிழகம் முழுவதும் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை
ஆசிரியர்கள் 18 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தொடக்க
கல்வித்துறையில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று 'ஆப்சென்ட்'
ஆகினர். இதனால் 90 சதவீதம் ஈராசிரியர் பள்ளிகள் முடங்கின. போராட்டத்தை முடக்கும்
வகையில் மாவட்ட நிர்வாகிகளையும் வீட்டுக்காவலில் வைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
தி.மு.க., 2021 தேர்தல் அறிக்கையில் அளித்த 'சம வேலைக்கு சம ஊதியம்' கோரிக்கையை
நிறைவேற்ற கோரி டிச.,26 முதல் பணிமூப்பு இடைநிலை ஆசிரியர்கள் இயக்கம்
(எஸ்.எஸ்.டி.ஏ.,) சென்னையிலும், மாவட்டங்களிலும் 18 வது நாளாக போராட்டங்களில்
ஈடுபட்டு வருகிறது. இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு
விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அரசுக்கு நெருக்கடி போராட்ட ஆசிரியர்கள் சென்னையில் முன்னறிவிப்பின்றி தினம் ஒரு
இடம் தேர்வு செய்து பல ஆயிரம் பேர் கூடுவதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல்
போலீசார் திணறுகின்றனர். கைது நடவடிக்கையில் கடுமை காட்டுவதால் ஆசிரியர் பலர்
காயமடைவதாக சர்ச்சை எழுந்துள்ளது. போராட்டத்திற்கு பிற ஆசிரியர் சங்கங்களும்,
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர்
அன்புமணி, மார்க் கம்யூ., தே.மு.தி.க., உள்ளிட்ட அரசியல் கட்சி ஆதரவும்
அதிகரித்து வருவதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தை வழி நடத்தும் எஸ்.எஸ்.டி.ஏ., மாநில நிர்வாகிகளை வீட்டுக்காவலில்
வைப்பது, ஓட்டலில் சாப்பிடச் செல்லும் ஆசிரியர்களை வலுக்கட்டாயமாக போலீஸ்
வாகனங்களில் ஏற்றி போராட்டத்தை முடக்கும் நடவடிக்கைகளில் அரசுக்கு எதிராக
விமர்சனம் எழுந்துள்ளது.
அதேநேரம் தேனி மாவட்டம் டி.அணைக்கரைப்பட்டி அரசு கள்ளர் தொடக்க, தஞ்சை திருவையாறு
ஒன்றியம் வானராங்குடி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப் பள்ளிகளில்
ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் சார்பில்
ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரும்பாலும் ஈராசிரியர் பள்ளிகள் என்பதால் அங்குள்ள மாணவர்களுக்கான கல்வி
பாதிப்பதை கண்டித்து பெற்றோர் இப்போராட்டங்களை பெற்றோர் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர சென்னையில் மாநில நிர்வாகிகளை
வீட்டுக்காவலில் வைத்தது போல், மாவட்டங்களில் நடக்கும் போராட்டங்களை
ஒருங்கிணைக்கும் நிர்வாகிகளையும் வீட்டுக் காவலில் அடைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
எஸ்.எஸ்.டி.ஏ., மதுரை மாவட்ட தலைவர் குமரேசன் கூறுகையில், மாணவர்கள்
பாதிக்ககூடாது என்பதற்காக தான் அரையாண்டு தேர்வு விடுமுறையில் போராட்டத்தை
தொடர்ந்தோம். அரசு அழைத்து பேசவில்லை. கொடுத்த வாக்குறுதியை கேட்கிறோம்.
குற்றவாளிகளை போல் அரசு நடத்துகிறது துரதிருஷ்டவசமானது என்றார்.
0 Comments