ஆண்டு இறுதித் தேர்வு குறித்து 10 நாளில் அறிவிப்பு செங்கோட்டையன் பேட்டி

ஆண்டு இறுதித் தேர்வு குறித்து 10 நாளில் அறிவிப்பு செங்கோட்டையன் பேட்டி
கோவில்பட்டியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: சூழ்நிலைக்கு ஏற்ப ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையில் எந்தெந்த வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு நடத்தலாம் என கல்வியாளர்களுடன் கலந்து பேசி முதல்வர் முடிவெடுப்பார். 

நடப்பு கல்வியாண்டுக்கான 10, 12ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் குறைப்பு மற்றும் ஆண்டு இறுதித்தேர்வு குறித்த அறிவிப்பு இன்னும் 10 நாட்களுக்குள் முதல்வரின் அனுமதி பெற்று புதிய அட்டவணையாக வெளியிடப்படும். கொரோனா ஊரடங்கால் 10, பிளஸ்2க்கு 100 சதவீத பாடங்களை எடுத்துச் செல்ல முடியவில்லை.

குறிப்பிட்ட காலத்தில் பள்ளிகளை திறக்க முடியவில்லை. பள்ளிகள் திறக்கின்ற நாட்கள் குறைந்து வருவதால், அதற்கேற்ப பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அதிலுள்ள சாராம்சங்களை கொண்டு கேள்விகள் கேட்க வேண்டிய நிலையில் முதல்வர் உத்தரவு வழங்கி உள்ளார். 

அதனடிப்படையில், கல்வியாளர்களின் கருத்துகளை அறியும் பணிகள் நிறைவடைந்துள்ளது. முதல்வரின் ஒப்புதல் பெற்றவுடன் அட்டவணை வெளியிடப்படும். சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை எப்படி வரப்போகிறது என்பதை பார்த்து தான் 10, பிளஸ்2க்கான பொதுத்தேர்வு அட்டவணை முடிவெடுக்கப்படும் என்றார்.

Post a Comment

0 Comments