ஆன்லைன் மூலம் 12-ம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம் - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் யோசனை

    ஆன்லைன் மூலம் 12-ம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் யோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு 02.03.2020 ல் தொடங்கி மார்ச் 24-ம் தேதி முடிந்தது. இத்தேர்வினை 8 லட்சத்து 16 ஆயிரம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24-ல் வெளியாவதாக இருந்தன.

     சீனாவில் தொடங்கிய உயிர்க் கொல்லி நோயான கரோனா வைரஸ், உலகை அச்சுறுத்தி வருகிறது. கரோனாவால் 18 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கரோனா வைரஸ் சமூகக் கூடல் மூலம் பரவாமல் தடுக்க 21 நாள்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதியுள்ள மாணவர்களும் பெற்றோர்களும் தேர்வு முடிவு எப்போது வரும், மேற்படிப்பு என்னவாகும் என்று குழப்பத்தில் உள்ளனர்.

       12-ம் வகுப்புப் பொதுத்தேர்வின் விடைத்தாள்களைத் தற்போது திருத்த முடியாத சூழல் உள்ளதாலும், ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகும் கரோனா பரவலைத் தடுக்க சமூகக் கூடலைத் தவிர்த்திடவேண்டும் என்பதாலும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வின் தேர்ச்சி முடிவு மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது. ஆகையால் பள்ளிக் கல்வித்துறை 12-ம் வகுப்பு விடைத்தாள்களை ஸ்கேன் செய்து கணினி மூலம் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அதன் பிறகு ஆன்லைன் மூலம் விடுமுறைக் காலத்திலேயே ஆசிரியர்கள் வீட்டிலிருந்தேபடியே விடைத் தாள்களைத் திருத்தம் செய்தால் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.

     ஆகையால், விடைத்தாள்களை ஆன்லைன் மூலமாக திருத்தம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments