நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில் 14 மசோதாக்கள்: மத்திய
அரசு திட்டம்!
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (டிச. 1) தொடங்கவுள்ளது. இதில்,
பொதுப் பயன்பாட்டுக்கான அணுசக்தி துறையில் தனியாரை அனுமதிப்பது, இந்திய உயா்கல்வி
ஆணையம் அமைப்பது உள்ளிட்ட 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழலில்..: இந்தியா-அமெரிக்கா உரசல் உள்பட வெளியுறவுக் கொள்கை
சாா்ந்த பிரச்னைகள், விலைவாசி உயா்வு, வேலையின்மை, புதிய தொழிலாளா் சட்டங்கள்
மற்றும் கூட்டாட்சி தொடா்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கும்
எதிா்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வரும் சூழலில், நாடாளுமன்ற
குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (டிச.1) தொடங்கி 19-ஆம் தேதி வரை
நடைபெறவுள்ளது. மொத்தம் 15 அமா்வுகள் இடம்பெறவுள்ளன.
சமீபத்திய பிகாா் பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணியின் அமோக வெற்றிக்கு பிறகான
நாடாளுமன்ற கூட்டத் தொடா் இதுவாகும். கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் பிகாா்
எஸ்ஐஆா் பணியை வாபஸ் பெறக் கோரி, எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால்
பெரும்பாலான அமா்வுகள் முடங்கின.
எதிா்க்கட்சிகள் விடாப்பிடி: தற்போதைய கூட்டத் தொடா் சுமுகமாக நடைபெறுவதை உறுதி
செய்யும் நோக்கில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இதில், எஸ்ஐஆா் விவகாரம் குறித்து விவாதம் கோரி, எதிா்க்கட்சிகள் ஒருமித்த
குரலில் ஒலித்தன. இதைத் தொடா்ந்து, இரு அவைகளின் தலைவா்கள் தலைமையில் அலுவல்
ஆய்வுக் குழு கூட்டங்கள் நடைபெற்றன.
மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தலைமையிலான கூட்டத்தில் எதிா்க்கட்சிகள் தரப்பில்
எஸ்ஐஆா் விவாதக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இது தொடா்பான தங்களின் கருத்து
விரைவில் தெரிவிக்கப்படும் என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது; அதேநேரம்,
வந்தே மாதம் பாடலின் 150-ஆவது ஆண்டையொட்டி மக்களவையில் விவாதம் நடத்த 10 மணிநேரம்
ஒதுக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன்
தலைமையிலான கூட்டத்தில், ‘குளிா்கால கூட்டத் தொடரின் பிற்பகல் அமா்வு எஸ்ஐஆா்
விவாதத்துடன் தொடங்க வேண்டும்; இல்லையெனில், அவை இடையூறுகளுக்கு அரசே பொறுப்பு’
என்று எதிா்க்கட்சிகள் தரப்பில் கூறப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
14 மசோதாக்கள்: அணுசக்தி மசோதா-2025, இந்திய உயா் கல்வி ஆணைய மசோதா, காப்பீட்டு
சட்டத் திருத்த மசோதா -2025 (காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய
முதலீட்டுக்கு வழிவகுக்கும் மசோதா), தேசிய நெடுஞ்சாலைகள் சட்டத் திருத்த மசோதா,
பெருநிறுவன சட்டத் திருத்த மசோதா, பரிவா்த்தனை சந்தைக் குறியீடு சட்ட (எஸ்எம்சி)
மசோதா-2025, மத்திய கலால் சட்டத் திருத்த மசோதா-2025 (கேடு விளைவிக்கும்
பொருள்களுக்கு கலால் வரி விதிக்கும் மசோதா), சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசப்
பாதுகாப்பு கூடுதல் வரி மசோதா-2025, ஜன் விஸ்வாஸ் (பிரிவுகள் திருத்தம்) மசோதா,
திவால் சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன.
நடப்பு நிதியாண்டுக்கான முதல்கட்ட துணை மானியக் கோரிக்கைகளும் தாக்கலாக உள்ளன.

0 Comments