பள்ளி வளாகங்களில் மழை முன்னெச்சரிக்கை: பள்ளிக்கல்வித் துறை
அறிவுறுத்தல்
பள்ளி வளாகங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’
என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை,
திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், உட்பட பல்வேறு மாவட்டங்களில்பரவலாக மழை
பெய்து வருகிறது. வரும் நாட்களிலும் மழைநீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை
மையம் கூறியுள்ளது.
மேலும், மழைநீர் பாதிப்பால் மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில்
வைரஸ் காய்ச்சல் பரவலும் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமுடன்
இருக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. இதற்கிடையே சில மாவட்டங்களில்
உள்ள பள்ளி வளா கங்களில் மழைநீர் தேங்கியுள்ளதாக பள்ளிக்கல்வித் துறைக்கு
புகார்கள் வந்தன. இதையடுத்து பள்ளி வளாகங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை
அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்
வருமாறு: பருவமழைக் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள்
ஏற்கெனவே பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி பள்ளிகளில் மின் இணைப்புகளை சரிபார்த்தல், திறந்தவெளி கிணறுகள்,
கழிவுநீர் தொட்டிகளை மூடுதல் என மாணவர்களின் பாதுகாப்புக்கு உரிய
அம்சங்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும். பள்ளி வளாகங்களில் தண்ணீர்
தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் நோய்களில் இருந்து
பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரைகள் வழங்க வேண்டும். காய்ச்சல் போன்ற
அறிகுறி உள்ள மாணவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று
சிகிச்சை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை தலைமை
ஆசிரியர்கள் முழுமையாகப் பின்பற்றி செய்ய வேண்டும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.

0 Comments