புதிய வருமான வரி மசோதா ஒரு வாரத்தில் அறிமுகம்

வருமான வரி விகிதங்கள் தொடர்பாக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா
அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிதித்துறை நிபுணர்கள் கூறியதாவது: புதிய வருமான வரி விகிதத்தில்
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு
உள்ளது. முழுமையான விரி விகிதங்கள் தொடர்பாக புதிய மசோதா ஒரு வாரத்தில்
அறிமுகம் செய்யப்படும் என்று பட்ஜெட் உரையின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன்
அறிவித்துள்ளார். இந்த மசோதா குறித்து கடந்த பட்ஜெட்டின்போதே அமைச்சர்
சுட்டிக் காட்டினார்.
கடந்த ஓராண்டில் விரிவான மசோதா வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய
மசோதாவில் பல்வேறு அம்சங்கள் இடம்பெறக்கூடும். அதாவது யாரெல்லாம் வருமான வரி
செலுத்த வேண்டும். அவர்களுக்கான வரி விகிதங்கள் என்னென்ன என்பன குறித்து
தெளிவாக குறிப்பிடப்படலாம் வருமான வரி கணக்கு தாக்கலை எவ்வாறு மேற்கொள்ள
வேண்டும். எவ்வாறு வருமான வரி செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை
விவரங்களும் புதிய மசோதாவில் இடம்பெறும். இவ்வாறு நிதித் துறை நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
வருமானவரி தாக்கல் காலம் நீட்டிப்பு: வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால வரம்பு 2
ஆண்டுகளாக இருந்தது. இது 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது என பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக் கடன்களுக்கான பணத்தை செலுத்தினால் அதற்கு
வரிப்பிடித்தம் (டிசிஎஸ்) செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். நேரடி வரி
பிரச்சினைகளை தீர்க்க, வரி செலுத்துவோர் 33,000 பேர் விவாத் சே விஸ்வாஸ் 2.0
திட்டத்தை பயன்படுத்தியுள்ளனர். மூத்த குடிமக்களுக்கான வட்டி வருவாய்க்கான
வரிபிடித்த வரம்பு இரட்டிப்பாக்கப்பட்டு ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு....: மூத்த குடிமக்களுக்கான வட்டி வருமானத்துக்கான
டிடிஎஸ் வரம்பு ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வயதான நிலையில் வாழ்வாதாரத்துக்கு வருமானம் இன்றி வட்டியை மட்டுமே
நம்பியிருக்கும் லட்சக்கணக்கான மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனளிப்பதாக
இந்த உச்ச வரம்பு இரட்டிப்பு அறிவிப்பு அமைந்துள்ளது.
மேலும், வீட்டு வாடகைக்கான டிடிஎஸ் வரம்பும் ரூ.2.4 லட்சத்தில் இருந்து ரூ.6
லட்சமாக பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது. டிடிஎஸ் பிடித்தம் விகிதங்கள்
மற்றும் வரம்புகளின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் அதில் சீரமைப்பு செய்யப்பட
உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
0 Comments