500 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி

500 தலைமை ஆசிரியர் பணியிடம் காலி

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 500 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், முதுநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை விரைந்து வழங்குமாறு, பள்ளிக்கல்வி துறைக்கு, சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகம் முழுதும், உயர்நிலை பள்ளிகள், மேல்நிலை பள்ளிகள் என, 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதனால், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களுக்கு நிர்வாக பணிகள் வழங்கப்பட்டு, கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது.

எனவே, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வகையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் பெருமாள் சாமி, பொதுச் செயலர் பிரபாகரன் ஆகியோர், பள்ளிக்கல்வி கமிஷனர் நந்தகுமாருக்கு அனுப்பியுள்ள மனு:

தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கவுன்சிலிங்கை, உடனடியாக நடத்த வேண்டும்.

தலைமை ஆசிரியர் இன்றி, பள்ளிகளின் நிர்வாக பணிகளை, மற்ற முதுநிலை ஆசிரியர்கள் கூடுதலாக கவனிப்பதால், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் எடுப்பதில் தொய்வு ஏற்படுகிறது. இதனால், பொது தேர்வில், பள்ளியின் சராசரி தேர்ச்சி சதவீதம் குறையும் அபாயம் உள்ளது.

எனவே, அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி, காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பதவிக்கு, முதுநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை தாமதிக்காமல் வழங்கி, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments