தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.19 முதல் விடுமுறையா - திருப்புதல் தேர்வு நடைபெறுமா

  தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.19 முதல் விடுமுறையா? திருப்புதல் தேர்வு நடைபெறுமா?

  தமிழகத்தில் தினசரி கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் வரும் ஜனவரி 19ம் தேதி முதல் பள்ளிகளில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகளை தொடங்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பள்ளிகள் விடுமுறை:
  தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் உள்ளிட்ட தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. மறுபுறம் பள்ளி, கல்லூரிகளுக்கு இம்மாதம் இறுதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுத்தேர்வுகளை கருத்தில் கொண்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா 3வது அலை 18 வயதிற்கு உட்பட்டவர்களை அதிகம் தாக்கும் என ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

   இதனால் 10 முதல் 12ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை ரத்து செய்து விட்டு ஆன்லைன் வகுப்புகளை தொடங்கலாம் என உயர் நீதிமன்றமும் அறிவுறுத்தி உள்ளது. பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையும் இதுவாகவே உள்ளது. மாணவர்களும் தினசரி அச்சத்துடன் பள்ளிகளுக்கு சென்று வருவதை காண முடிகிறது.

   தற்போது பொங்கல் பண்டிகை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அதனை நீட்டிக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இன்னும் சில நாட்களில் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Post a Comment

0 Comments