தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி – முன்னேற்பாடுகள் தீவிரம்

  தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி – முன்னேற்பாடுகள் தீவிரம்

  கொரோனா பெருந்தொற்று சூழலை கருத்தில் கொண்டு வரும் நவம்பர் மாதத்திற்குள் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசியை பள்ளிகளிலேயே செலுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
மாணவர்களுக்கு தடுப்பூசி:
  தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகள் முழுதுமாக செயல்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக மட்டுமே பாடங்கள் கற்பிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தமிழகத்தில் குறைந்துள்ளதை அடுத்து கல்வி நிறுவனங்கள் திறக்க அரசு முடிவு செய்தது. இதனால் முதல் கட்டமாக 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.

 அதன்பின்னர், நிலைமை மேம்பட்டதை அடுத்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். 
  
  இந்நிலையில், பெருந்தொற்று பாதிக்கும் சூழலில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதால் மாணவர்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டி தமிழக அரசு முடிவு செய்து, வழக்கமான நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை உரிய காலத்தில் மாணவர்களுக்கு செலுத்த முடிவு செய்துள்ளது.

  மேலும், பள்ளி வளாகங்களிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 முதல் 6 வயது வரையுள்ள மாணவர்களுக்கு டிபிடி எனப்படும் தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசியை வழங்க வேண்டும். 

   10 வயதுள்ள மாணவர்களுக்கும் ரண ஜன்னி தடுப்பூசி வழங்குவது அவசியம் என்றும், இதற்காக வகுப்பு வாரியாக மாணவர்களின் விபரம் சேகரிக்கும் பணி நடக்கிறது. சுழற்சி முறையில் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments