கொரானா தொற்று அதிகரிப்பால் பள்ளிகளை மூட சுகாதாரத்துறை ஆளுநருக்கு பரிந்துரை

    புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தற்காலிகமாக பள்ளிகளை மூட துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. கொரோனா அதிகரித்து வருவதால் பள்ளிகளை தற்காலிகமாக மூடிவிடலாம் என கவர்னருக்கு மாநில சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் இனி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இம்மாதம் 31ம் தேதி வரை 1 முதல் 9 வரை வகுப்புகள் செயல்படும். கோடைவிடுமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி பள்ளிகள் திறந்து 5 நாட்கள் நடத்தப்படுகிறது.

       இந்நிலையில் கவர்னர் மாளிகையில் நேற்று கொரோனா தடுப்பூசி கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், கொரோனா தடுப்பு குறித்து மாநிலத்தில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, புதுச்சேரியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை தற்காலிகமாக மூடிவிடலாம். கொரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சலை கண்டறிய முகாம் நடத்த வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்டினை 70 சதவீதமும், 30 சதவீதம் ரேபிட் டெஸ்ட் எடுத்து பரிசோதனைகளை அதிகரிக்கலாம். புதுச்சேரியில் மாஸ்க் அணியும் இயக்கத்தை தொடங்கி, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். மருத்துவ மாணவர்களையும், முன் கள பணியாளர்களாக இணைக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் பரிந்துரை செய்தனர். இது குறித்து பள்ளி கல்வித் துறையுடன் சுகாதார துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



Post a Comment

0 Comments