அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்வு

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் அரசு உதவிப்பெறும் பெண்கள் பள்ளியில் 20 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 36 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

  அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 8 ஆம் தேதி முதல், ஒரு மாணவி பள்ளிக்கு வரவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அது குறித்து விசாரித்த பொழுது மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவருவது தெரியவந்தது. 

   இதனையடுத்து அந்த பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்து, கடந்த 11 ஆம் தேதி 460 மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று முதல்கட்டமாக 20 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

   இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில், மேலும் 36 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.   பள்ளி ஆசிரியர் ஒருவருக்கும் தொற்று  உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதால் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

     அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பரவலை தடுக்க அப்பகுதியில் சிறப்பு முகாம் அமைத்து சுகாதாரத்துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.  அனைத்து நோய் தடுப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

     பள்ளியில் கரோனா அதிகரித்து வருவதை அதிகாரிகள் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட மாணவியருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்க ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார். கரோனா பரவலை தடுக்க 35 குழுக்கள் அமைச்சு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 



Post a Comment

0 Comments